புதுடெல்லி: இஐஏ 2020 வரைவை மொத்தம் 22 மொழிகளிலும் வெளியிட வேண்டுமென்ற நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்தாத காரணத்திற்காக, மோடி அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டுமென்ற முறையீட்டு மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசை கேட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இஐஏ 2020 வரைவை 22 மொழிகளிலும் மத்திய அரசு வெளியிட்டு, மக்களின் கருத்தை அறிய வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவு செயல்முறைப்படுத்தப்படவில்லை.

எனவே, மத்திய அரசின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பு வழக்காகப் பதிய வேண்டுமென முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, இந்த முறையீட்டு மனுவிற்கு பதிலளிக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்த முறையீட்டு மனுவிற்கு ஆகஸ்ட் 17ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் விக்ராந்த் டோங்காட் இந்த முறையீட்டு மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.