சென்னை:

மணல் கடத்தலுக்கு துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தலில் கைதான பாபு என்பவரை விடுவிக்க கோரி வேடியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதிகள் சுப்ரமணியம், ராமதிலகம் ஆகியோர் முன்பு இன்று விசாரணை நடந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உடந்தை இல்லாமல் மணல் கடத்துவது சாத்தியமில்லை.

அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இது வரை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர்.