மதுரை:
சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சாத்தான்குளம் போலீசாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையால், விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் இறந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக வழக்கை மதுரை உயர்நீதி மன்றம், சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், வழக்கு தொடர்பாக, சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள்  பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்  மற்றும் 2 காவலர்களையும் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் இன்றைய விசாரணையின்போது,  கைது செய்யப்பட்டவர்களை எங்கு ஆஜர்படுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர்.
அதன்படி, சாத்தான்குளத்தில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு கைதானவர்களை அழைத்துச் செல்வது கடினம் என்பதால், சாத்தான்குளம் வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் உள்ளிட்டோரை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி முன் ஆஜர்ப்படுத்த அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.   மேலும், தூத்துக்குடி மாவட்ட தலைமை நீதிபதிக்கு  அனைத்து விதமான அதிகாரம் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.