சென்னை:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் 90 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மெரினாவில் போரட்டம் நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது என்று சென்னை காவல் துறையினர் பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இவ்வழக்கில் நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அப்போது, சென்னை மெரினா கடற்கரையில் ஒருநாள் மட்டும் அய்யாக்கண்ணு போராட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு அவசர கால மனுவாக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. அரசு தரப்பிலும், அய்யாக்கண்ணு தரப்பிலும் சமர்ப்பிக்கப்பட் வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். பின்னர் ஒரு நாள் போராட்டம் நடத்த வழங்கப்பட்ட அனுமதிக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.