சென்னை:

போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க குழு அமைப்பது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி கிருபாகரன் கூறுகையில்,‘‘ கேரளாவை போல் தமிழகத்திலும் 8 மணி நேரம் பணியை அமல்படுத்துவுதில் என்ன தயக்கம். போலீசில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. ஆனால், 10 ஆயிரம் போலீசார் ஆர்டர்லிகளாக உள்ளனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகளின் வீடுகளிலும் உள்ள ஆர்டர்லிகளை திரும்ப பெற வேண்டும்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால், போலீசாருக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை. போலீசாரின் பிரச்னைகளை தீர்க்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பது குறித்து 6 வாரத்தில் அரசு பதிலளிக்க வேண்டும்’’ என்றார். வழக்கின் விசாரணை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.