சென்னை:

மிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில் வளாகத்தினுள்  செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்திற்குள் அமைந்துள்ள கடையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கோவில் மண்டபம் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து தொடரப்பட்ட வழக்கில், கோவில் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு பிறப்பபித்தது.

இந்நிலையில், பழனி கோவில்  அடிவாரத்தில் உள்ள மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 21-ந் தேதி பழனி கோயில் அறநிலையத்துறை இணை ஆணையர் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியில் கடை நடத்தி வருபவர்கள் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கின் இன்றைய விசாரணையின்போது, கோயில் வளாகம் முழுவதும் தரமாக பராமரிக்க வேண்டியது அறநிலையத்துறை அதிகாரிகளின் கடமை என்ற உயர்நீதி மன்றம், தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில்களில் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதற்கான சுற்றறிக்கையை அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை ஐகோர்ட்டு கிளையின் அதிரடி உத்தரவு, கோவில் வளாகங்களில் கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஆயிரக்கணக்கான சிறு வியாபாரிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.