ரஜினி, விஜய் முகக்கவசத்துக்கு கடும் கிராக்கி…

வானில் பறக்க விடும் பட்டத்தில் இருந்து மார்பில் அணியும் பனியன் வரை, அவற்றில் சினிமா நடிகர் படம் இருந்தால் ரசிகர்கள் மத்தியில் அதன் மதிப்பு தனிதான்.

இப்போது சினிமா நட்சத்திரங்கள் உருவம் தாங்கி வரும் முகக்கவசங்களுக்கும், அதே கிராக்கி ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் பனியன் தயாரித்து வந்த நிறுவனங்கள், கொரோனா பாதிப்பு காரணமாக முகக்கவசங்கள் தயாரிப்பு தொழிலில் இறங்கி விட்டன.

ஆரம்பத்தில் ’பிளாங்க்’ முகக்கவசங்களை தயாரித்து விற்ற இந்த நிறுவனங்கள், அண்மைக்காலமாக ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்கள் உருவங்களைத் தாங்கிய முகக்கவசங்களை தயாரித்து விற்பனை செய்ய, அவற்றுக்கு அமோக வரவேற்பு.

இந்த மாதிரி முகக்கவசங்கள் தினம்தோறும் 500 ‘பீஸ்’கள் வரை தயாரிக்கப்படுகின்றன. அத்தனையும் உடனடியாக விற்றுத் தீர்கின்றன.

தொடக்கத்தில் ஓரிரு நிறுவனங்கள் மட்டும், நட்சத்திர முகக்கவசங்களை’ தயாரித்தன.

 கிராக்கி காரணமாகப் பல நிறுவனங்கள், அந்த மாதிரி முகக்கவசங்களை தயாரிக்கும் பணியில் முழு மூச்சாய் ஈடுபட்டுள்ளன.

மத்திய அரசின் அனுமதி கிடைத்தால்,இந்த முகக்கவசங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் , திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்

– ஏழுமலை வெங்கடேசன்