ஸ்ரீநகர்: ஜம்முகாஷ்மீரில்  அதிவேக இணைய சேவைக்கான  தடை ஆகஸ்டு 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதன்மை செயலாளர் தரப்பில் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: பாதுகாப்புப் படையினர், அரசியல் தலைவர்கள்  மற்றும் அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்காக திட்டமிடுவதை தவிர்க்க மொபைல் மூலமாக அதிவேக இணைய சேவையை பயன்படுத்தும் கட்டுப்பாடுகள் அவசியமாகி உள்ளது.
கடந்த ஆண்டு  ஆகஸ்டு 5 ம் தேதி ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கான  சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்படும் என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். பின்பு அதற்கான அரசாணை  வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைய உள்ளதால் , வரும் வாரங்களில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆகவே அதிவேக இணையத்திற்கான தடை ஆகஸ்டு 19 வரை நடைமுறையில் இருக்கும். மேலும் மொபைல் தரவுக்கான இணைய சேவை 2 ஜி வேகத்தில் கிடைக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.