சென்னை:

கிராமசபைக் கூட்டங்களைக் கூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்எல்ஏ நேரு பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, கிராமசபைக் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், கடந்த அக்டோபர் 2-ம் தேதி நடக்க இருந்த கிராமசபைக் கூட்டங்கள், கரோனா தொற்றைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டன. இதை எதிர்த்து, திமுக எம்எல்ஏ நேரு, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குத் தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், சட்டங்களுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் படி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததால், தமிழக அரசு, கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதால் மூன்று வாரங்களில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்த உத்தரவைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருக்கிறார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று (நவ. 5) விசாரணைக்கு வந்தபோது, விதிகளின்படி கிராமசபைக் கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க கிராமசபைத் தலைவர்களுக்கு அதிகாரம் உள்ளதாக கே.என்.நேரு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

அதேசமயம், நிகழ்ச்சி நிரல்களைத் தீர்மானிக்க பஞ்சாயத்துகள் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் உள்ளதாகவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அரசுத் தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயண் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தனிமனித விலகல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்றால், டாஸ்மாக் கடைகளில் தனிமனித விலகல் பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர்.

கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்ய அதிகாரம் உள்ள நிலையில், குறிப்பிட்ட விவகாரம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனக் கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.