விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை இந்து முன்னணி நிறுவ உள்ளதாக இந்நிகழ்வுக்கான மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள பக்தவத்சலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் சுமார் 1.50 லட்சம் விநாயகர் சிலைகளை நிறுவ இந்து முன்னணி அமைப்பு முடிவெடுத்துள்ளது. அத்தோடு, சிறப்பு பூஜைகளும், நிகழ்ச்சிகளையும் நடத்தவும் அவ்வமைப்பால் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் செய்தி தொடர்பாளரான பசுதாய் கணேசன், “இவ்வாண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை, தமிழை பாதுகாக்கும் நிகழ்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு போலி தமிழ் அமைப்புகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்வாகவும் நடத்த உள்ளோம். பல்வேறு சமூதாயங்களை சேர்ந்த தலைவர்களை இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக அழைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.