51 சக்தி பீடங்கள் உருவான வரலாறு

ம்பிகையின் உடலை 51 பாகமாகச் சிதைத்த மகாவிஷ்ணு, சிதறிய உடல்பாகங்கள் 51 சக்தி பீடங்களாக மாறிய அற்புதமான வரலாறு :-

 

 

பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சர்வேஸ்வரனான சிவபெருமானிடம் பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும் வரமாகப் பெற்றான். மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளிலிருந்து முற்றிலும் விலகிச் செயல்படவும் துவங்கினான். சில தொடர் நிகழ்வுகளால், வரமளித்த இறைவனிடமே க்ரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

ஹரித்வாரில் அமைந்துள்ள ‘கனகல்’ என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி, யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.

இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாகசாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதைச் சிவபுராணம் விரிவாகப் பேசுகிறது. இத்தலத்தில் ‘அம்பிகை தன் தெய்வ உடலை மாய்த்துக் கொண்ட ஹோம குண்டத்தை’ இன்றும் தரிசிக்கலாம். இறைவனின் கருணையால் ஆட்டின் தலையுடன் மீண்டும் உயிர்த்து எழுந்தான் தட்சன்.

சிவபெருமான், சதி தேவியின் திருடலைச் சுமந்தபடி உக்கிர தாண்டவம் ஆடத்துவங்க, மஹாப்ரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. மகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாகப் பூமியில் விழச்செய்தார் இப்படிச் சிதறிய போது, அம்மனின் 51 பாகங்கள் 51 இடங்களில் விழுந்தது அப்படி விழுந்த அந்த இடங்கள்தான் தற்போதைய 51 சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன.