புதுச்சேரி:

புதுச்சேரியில்  காங்கிரஸ் பிரமுகர் சாம்பசிவம் என்பவர்  வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியை அடுத்த கிருமாப்பாக்கம், பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் சாம்பசிவம் முன்னாள் கவுன்சிலரான இவர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அடுத்த மாதம் நடைபெற உள்ள தனது தங்கையின் திருமணம் தொடர்பாக  திருமண பத்திரிகை வைக்க  தனது நண்பர் ராஜுவுடன் காரில்  கிருமாப்பாக்கத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது,  அவர் கார்மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல்  வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.  இதனால் கார் தீப்பற்றி எரிந்த நிலையில், காரில் இருந்து  இறங்கி ஓடியவரை மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து. இதில் சம்பவ இடத்திலேயே  சாம்பசிவம் மரணமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த  சாம்பசிவத்தின் நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து, குற்றவாளிகளை விரைவில் கண்டறிய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுச்சேரியில் அரசியல் கொலைகள் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.   சில வருடங்களுக்கு முன்பு முன்னாள் கவுன்சிலர் வீரப்பன் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது அக்காள் மகன்தான் சாம்பசிவம்,  ஆகையால் முன்விரோதங்களால் இவரும் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என கிருமாபாக்கம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்