குஜராத் முதல்வர் ரூபானி

அகமதாபாத்,

குஜராத்தில் நடைபெற இருக்கும் ராஜ்ய சபா தேர்தலில் பாரதியஜனதா சார்பாக 3 பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் 3 பேரும் வெற்றி பெறுவார்கள் என்று குஜராத் முதல்வர் ரூபானி தெரிவித்து உள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு காரணமாக குஜராத்தில் குதிரை பேரம் மீண்டும் நடைபெற்று வருதை உறுதி செய்துள்ளது.

குஜராத்தில், காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிக்கு ஆக.8-ல் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பாரதியஜனதா சார்பாக, பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா,  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பல்வந்த் சிங் ராஜ்புத் ஆகிய 3 பேரும்,காங்., சார்பில் , அகமது படேல் என 4 பேர் போட்டியிடுகின்றனர்.

ராஜ்யசபா தேர்தலில் காங்., வேட்பாளர் அகமது படேல் வெற்றி பெற 44 எம்எல்ஏக்கள் தேவை. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பாரதியஜனதா கட்சியினர் விலைகொடுத்து வாங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக பெங்களூர் அழைத்து செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இன்று குஜராத் திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் ரக்ஷ்சா பந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குஜராத் முதல்வர் ரூபானி, ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் 3 பாரதியஜனதாவினரும் வெற்றி பெறுவார்கள் என் கூறி உள்ளார்.

குஜராத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சொகுசு விடுதியில் உல்லாசமாக உள்ளனர்  என்று கூறி முதல்வர் ரூபானி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  அனைவரும் சுயகட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர்களை இனி நம்பகூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

நடைபெற இருக்கும் ராஜ்யசபா தேர்தலில அகமது பட்டேல் கண்டிப்பாக தோற்பார் என்றும் அவர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள அகமது படேல் வெற்றிபெற போதுமான எம்எல்ஏக்கள் காங்கிரசில் இருந்தும், குஜராத் முதல்வர் இப்படி பேசியிருப்பது, பாரதியஜனதா கட்சியினரின் குதிரை பேரம் தொடருவதையே வெளிச்சம் போட்டு காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.