டெல்லி: ஊரடங்கு தடைகாலத்தின் போது வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க கூடாது, வீட்டை காலி செய்யவும் வற்புறுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியாவில் தற்போது தனது தீவிரத்தை காட்டி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க 21 நாட்களுக்கு நாடு தழுவிய அளவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு தடைகாலத்தின் போது வீட்டின் உரிமையாளர்கள் வாடகை வசூலிக்க வேண்டாம், வீட்டை காலிசெய்யவும் வற்புறுத்தக்கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:

டெல்லியில் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்ட தொழிலாளர்களை 2  வாரங்களுக்கு அருகிலுள்ள தங்குமிடம் என்ற இடத்தில் தனிமைப்படுத்த வேண்டும். புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த மாநிலங்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியேறியவர்கள், குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு அந்தந்த மாநில அரசாங்கங்களின் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளால் அருகிலுள்ள தங்குமிடத்தில் வைக்கப்பட வேண்டும்.

பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவில், முதலாளிகள் தங்கள் தொழிலாளர்களின் ஊதியத்தை எந்தவொரு விலக்குமின்றி சரியான தேதிகளில் செலுத்த வேண்டும். நில உரிமையாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து ஒரு மாத வாடகை கேட்க கூடாது. அப்படி வெளியேற்றுவோர் கடும் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.