ருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா. சபையில் உரையாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலரான மாணவி  கிரேட்டா தன்பெர்க் உலக அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார்.

தனது   ஆவேச கேள்விகளால் அரசியல்வாதிகளை வறுத்தெடுத்த  கிரேட்டா தன்பெர்க், “உங்களுக்கு எவ்வளவு தைரியம்?” என்று பேசி உலக நாடுகளின் தலைவர்களை அதிர வைத்தார்.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்பு குறித்து சுவீடன் நாட்டைச் சேர்ந்த மாணவியான கிரெட்டா தன்பெர்க் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு வெளியே பள்ளிகள் புறக்கணிப்பு கோஷத்துடன் போராடி வருகிறார்.

இவரது பேச்சு உலகம் முழுவதும் ஆதரவாளர்களை ஈர்த்து  வருகிறது. ஏற்கனவே சென்னையில்கூட அவருக்கு ஆதரவாக பள்ளிகள் புறக்கணிப்பு நடைபெற்றது.

அதுபோல, விமானத்தில் பறப்பையும் தவிர்க்க வலியுறுத்தி ‘பறத்தல் அவமானம்’ என இவர் பிரசாரம் செய்து வருகிறார். பறப்பது அவமானம் என்று வலியுறுத்தி வரும் கிரெட்டா,  விமானங்கள் அதிகளவில் பசுமைக்குடில் வாயுவை வெளிப்படுத்துகிறது. அதனால் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என பிரசாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஐ.நா.சபையில் உணர்ச்சிகரமாக  உரையாற்றிய மாணவி  கிரெட்டா தன்பெர்க் உலக நாடுகளின் தலைவர்களை கடுமையாக குற்றம் சாட்டினார்.  காலநிலை மாற்றம் தொடர்பாக உலக நாடுகள்  நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டியவர், “எனது கனவுகளை களவாடிவிட்டீர்கள்? என்று குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து ஆவேசமாக  பேசியவர், பருவநிலை மாற்றம் தொடர்பாக சரியான கொள்கை வகுக்காத அரசியல்வாதி களை நோக்கி சரமாரியாக கேள்வி கேட்டார். பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் நிகழ்வுகள் அழிவுகள் குறித்து பேசியவர்,  “இவை அனைத்தும் தவறு. நான் இங்கே இருந்திருக்கக் கூடாது. இந்த பெருங்கடலின் மறுமுனையில் இருக்கும் பள்ளியில் நான் இருந்திருக்க வேண்டும் என்றவர்,  ஆனாலும் நீங்கள் அனைவரும் நம்பிக்கையோடு எங்களிடம் வருகிறீர்கள் என்றார்.

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கு  அந்நாடுகளின் தலைவர்களே காரணம் என்று  குற்றம் சாட்டியவர்,  உங்களது வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளை, எனது குழந்தைப் பருவத்தைக் களவாடிவிட்டீர்கள் என்றும், இருந்தாலும், நான் பாக்கியசாலிகளில் ஒருத்தி என்றார்.

மேலும் உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக  மக்கள் துன்பப்படுகிறார்கள், செத்து மடிகிறார்கள் என்று கூறிய கிரெட்டா, மொத்த சூழலியலும் உருக்குலைந்துவிட்டது என்றவர்,  அழிவின் தொடக்கத்தில் நாம் இருக்கிறோம்,  ஆனால், பணம் குறித்து… நித்தியமான பொருளாதார வளர்ச்சி குறித்த கற்பனை கதைகளைப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள்…  உங்களுக்கு எவ்வளவு தைரியம்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசியவர்,  நீங்கள் எங்களை வஞ்சித்துவிட்டீர்கள் என்று உலக தலைவர்களை குற்றம் சாட்டிய கிரெட்டா,  உங்களது துரோகத்தை இளைஞர்கள் புரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்,  எதிர்கால தலைமுறை யினரின் விழிகள் உங்கள் மீதுதான் உள்ளன. எங்களுக்குத் துரோகம் செய்ய நினைத்தால்….  நான் இப்போது சொல்கிறேன், “நாங்கள் உங்களை மன்னிக்க மாட்டோம்” என்று நாதழுதழுக்க கூறினார்.

கிரெட்டா தன்பெர்க்கின் உணர்ச்சிமிகு பேச்சு வைரலாகி வருகிறது…