சிவபெருமானுக்கு ஏற்ற விரதங்களில் ஒன்றுதான் பிரதோஷம். பிரதோஷ வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது. ஒவ்வொரு மாதமும், மாதமிருமுறை, அதாவது வளர்பிறையில் ஒரு பிரதோஷமும் தேய்பிறையில் ஒரு பிரதோஷம் வரும்.

பெயர் காரணம்;

மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது ஆலகால விஷம் வெளிப்பட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வதென்று தெரியாமல்  அப்படியே போட்டுவிட்டு அனைவரும் ஓட்டம் எடுத்தார்கள்.

திருமால், பிரம்மன், மற்றும் தேவர்கள் வேண்டிக்கொண்டதன் பேரில் அந்த விஷத்தை சிவபெருமான் உண்டுவிட்டார்.  இதைப் பார்த்துக் கொண்டிருந்த  அன்னை பார்வதி ஒடிவந்து சிவனாரின் கண்டத்தையிருகப் பற்றிட, கண்டத்திலேயே உறைந்துப் போனது  ஆலகாலவிஷம். ஆலகாலத்தின் சூட்டினாலும் விடத்தின் கருநிறத்தினாலும் கண்டம் நிறமாறிட “நீலகண்டர்” என திருப்பெயர்  சிவபெருமானுக்கு வந்தது.

 

பதினோறாம் பிறையாகிய ஏகாதசியில் அவர் விஷம் உண்டார். பணிரெண்டாம் பிறையாகிய துவாதசியில் காட்சி கொடுத்தார். பதிமூன்றாம் பிறையாகிய  திரயோதசி மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் அளித்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும்.  எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது. பிரதோஷ காலம் என்பது மாலை 4.30 மணி முதல் 6.00 மணி  வரையாகும். இந்த காலத்தில் சிவபெருமானை தரிசிப்பது உகந்தது.