சென்னை,

ஓகி புயல் காரணமாக இதுவரை மீட்கப்பட்ட மீனவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து தமிழக மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விவரம் தெரிவித்துள்ளார்.

அதில், இதுவரை 2805 மீனவர்கள்  மீட்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  வெவ்வேறு மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளதாகவும், மேலும் காணாமல் போனவர்களை மீட்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு  வருவதாகவும்  அவர்  தெரிவித்துள்ளார்.

ஓகி புயலால் கடலில் மாயமான குமரி மாவட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர கோரி சென்னை சேப்பாக்கம், குமரி மாவட்டம் குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  குமரி மாவட்ட மீனவக்ள் சங்கு கடல் பகுதியில் 20 முதல் 40 நாட்கள் தங்கி மீன்பிடித்து வருவது வழக்கம். அவர்கள் கடந்த வாரம் வீசிய  ஓகி புயல் காரணமாக  திசைமாறி கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் லட்சத்தீவு பகுதியிலும் கரை ஒதுங்கியுள்ளனர்.

வெளி மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ள மீனவர்களை மீட்டு கொண்டுவர ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு வெளி மாநிலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, வெளி மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ள மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை அளித்துள்ளது.

மீட்கப்பட்டுள்ள மீனவர்கள் விவரம்:

கேரளா –  152 மீனவர்கள்

கர்நாடகா /  975 மீனவர்கள்

மகாராஷ்டிரா – 836 மீனவர்கள்

குஜராத், லட்சத்தீவு  2805 மீனவர்கள்  மீட்கப்பட்டுவெளி மாநிலங்களில் பாதுகாப்பாக உள்ளனர்.

மேலும், 301 மீன்பிடிபடகுகளும் 62 சிறிய படகுகளும் பாதுகாப்பாக உள்ளன என்றும் கூறினார்.

மீனவர்கள் தமிழகம் திரும்ப  இலவச டீசல் வழங்கும் பணி நடைபெற்றுவருவதாகவும், அவர்கள் செலவுக்காக  2000 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றும் கூறினார்.

மேலும், ஓகி புயல் காரணமாக, குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள  பாதிப்பு குறித்து முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.