லக்னோ: அரசியல் லாபத்திற்காக தனது சொந்த மனைவியையே தவிக்கவிட்ட பிரதமர், எப்படி பிறரின் மனைவிகள் மற்றும் சகோதரிகளை மதிப்பார் என்று மோடியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் மாயாவதி.

மேலும், ராஜஸ்தானின் காங்கிரஸ் அரசுக்கு கொடுத்துவரும் ஆதரவை வாபஸ் பெற தைரியம் இருக்கிறதா? என்று சவால்விட்ட மோடிக்கு, “வன்புணர்வு தொடர்பாக கடுமையாக மற்றும் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத பட்சத்தில், எங்களின் சார்பாக தேவையான அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார் அவர்.

அதேசமயம், நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக நடந்த உனா கசையடி சம்பவம், ரோகித் வெமுலா சம்பவம் உள்ளிட்டவைகள் தொடர்பாக மோடி எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த திருமணமான பெண்கள், தங்களுடைய கணவர்கள் மோடிக்கு அருகில் நெருங்கிச் செல்வதை நினைத்து அச்சம் கொள்கிறார்கள்.

ஏனெனில், மோடி தன் மனைவியை தனியே விட்டுப் பிரிந்ததுபோல், தம் கணவர்களையும் தங்களைவிட்டு பிரித்து விடுவாரோ என அவர்கள் பயம் கொள்கிறார்கள் என்பதாக நான் கேள்விப்பட்டேன்” என்றும் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.