மும்பை: இந்திய மூலதன சந்தைகளில், ‘பங்கேற்பு பத்திரங்கள்’ மூலமாக கடந்த மே மாத முடிவுவரை சேர்ந்த தொகை 60 ஆயிரத்து 27 கோடியாக உயர்ந்துள்ளது என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பங்கேற்பு பத்திரங்கள், ‘பி நோட்’ என்று அழைக்கப்படுகின்றன.

சில முதலீட்டாளர்கள், தங்களைப் பதிவு செய்துகொண்டு, நேரடியாக, இந்திய மூலதனச் சந்தைகளில் முதலீடு செய்யாமல், அன்னிய முதலீட்டாளர்கள் மூலமாக முதலீடுகளை செய்வதுண்டு. அப்போது, அன்னிய முதலீட்டாளர்களால், அவர்களுக்கு வழங்கப்படுவதுதான் பங்கேற்பு பத்திரங்களாகும்.

கடந்த 2004ம் ஆண்டு, அக்டோபர் மாதத்தில் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலான முதலீடு, ரூ.44 ஆயிரத்து 586 கோடியாக இருந்தது. அதன்பிறகு, நடப்பு ஆண்டில்தான் மிகக் குறைவாக இருந்தது. கடந்த மே மாத நிலவரப்படி, மொத்தம் ரூ.60 ஆயிரத்து 27 கோடி முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இதில், ரூ.49 ஆயிரத்து 160 கோடி பங்குகளிலும், ரூ.10 ஆயிரத்து 106 கோடி கடன் பத்திரங்களிலும், ரூ.159 கோடி பொருள் வணிகத்திலும், ரூ.103 கோடி கலப்பின பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.