சென்னை:

ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்துள்ளதை தொடர்ந்து அங்கு வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யவிருந்த ரூபாய் நோட்டு கட்டுகளையும், வாக்காளர் பெயர் பட்டியல் அடங்கிய நோட்டையும் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் கைப்பற்றினார்.

ஆர்கே நகரில் இன்று காலை முதல் பணப் பட்டுவாடா நடந்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. பல வீடுகளில் பணம் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை என்று கூறி திமுக, தினகரன் அணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆர்கே நகர் தொகுதி போர்க் களமாக காட்சி அளிக்கிறது. பணப்பட்டுவாடா குறித்த புகாரையும் போலீஸார் வாங்க மறுப்பதாக திமுக, தினகரன் அணியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணத்தையும், பெயர் பட்டியல் அடங்கிய நோட்டு புத்தகத்தையும் தினகரன் அணியில் தங்க தமிழ்செல்வன் கைப்பற்றியுள்ளார்.

அந்த நோட்டில் இரட்டை இலை வரையப்பட்டு, 15 குடும்பத்துக்கு பணம் வழங்க வேண்டும் என்ற தகவல் இடம்பெற்றிருந்தது. மேலும், ஆண் வாக்காளர்கள், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதில் இருந்தது. அவற்றை தங்க தமிழ் செல்வன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இத குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.