சென்னை

ட்சய திருதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்பதைக் கட்டாயமாகக் கொண்டோருக்கான செய்தி இதோ

அட்சய திருதியை அன்று செய்யும் செயல்கள் பன்மடங்கு பலனைத் தரும் என்பது ஐதீகம்.  எனவே அன்று தான தருமங்கள் அதிக அளவில் செய்யலாம் என அக்காலத்தில் சொல்லி வைத்தனர்.   ஆனால் அதன் பிறகு தங்க நகைகள் வாங்கினால்  அது பன்மடங்காகும் என ஒரு நம்பிக்கை பிறந்தது.  அதையொட்டி பலரும் அட்சய திருதியை அன்று ஒரு கிராம் நகையாவது வாங்க வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கி கொண்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து  அனைத்து நகைக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.   தங்க நகை விற்பனை அடியோடு நின்று போனது.   நாளை அதாவது 26/04/2020 அன்று அட்சய திருதியை தினமாகும்.  ஆனால் நகைக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்குச் செல்ல இயலாது.

இதையொட்டி நகைக்கடைக்காரர்கள் நகைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யத் தொடங்கி உள்ளனர்   ஆன்லைன் மூலம் கடைகளின் இணைய தளங்களுக்குச் சென்று நகைகளைத் தேர்வு செய்து வாங்கிக்கொள்ளலாம்.  எடைக்கு ஏற்ப ஆன்லைனில் இன்றைய விலையில் பணம் செலுத்தி நகைகளை முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது..

தற்போது அத்தியாவசிய பொருட்கள் தவிர வேறு எதுவும் கொரியர் மூலம் அனுப்ப முடியாது  எனவே இந்த நகைகளைக் கடை உரிமையாள்ரக்ள் பத்திரப்படுத்தி வைப்பார்கள்.  ஊரடங்கு முடிந்த பிறகு கடைகளுக்கு நேரில் சென்று வாங்கலாம்.   இந்த முறைக்கு மக்கள் பேராதரவு காட்டி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.