னது மகளை கடத்த வேலை செய்தவர்கள் திட்டமிட்டதாகவும், அதனை முன்வைத்தே ‘மகாநதி’ கதையை தான் எழுதியதாகவும் நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

பிரபல இதழ் ஒன்றின் இணையதளத்துக்காக தனக்குப் பிடித்த 70 படங்களை வரிசைப்படுத்தி பட்டியலிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன். இதில் தான் எழுதி, நடித்த ‘மகாநதி’ படத்தையும் குறிப்பிட்டு இருக்கிறார்.

அந்தக் கதையை எழுதத்தூண்டிய சம்பவம் பற்றி முதன் முறையாக தெரிவித்திருக்கிறார்.

அதில், “எது என்னை ‘மகாநதி’ எழுதவைத்தது என்பது பற்றி நான் இதுவரை தெரிவித்ததில்லை. இப்போது எனது மகள்கள் வளர்ந்துவிட்டனர். உலகம் எப்படி என புரிந்துகொண்டிருப்பார்கள். ஆகவே இப்போது சொல்கிறேன்.

என் வீட்டில் வேலை செய்தவர்கள் எல்லோரும் சேர்ந்து எனது மகளை கடத்தி அதன் மூலம் என்னிடம் மிரட்டி பணம் பெறலாம் என திட்டமிட்டனர்.  ஒரு முறை அதற்கான ஒத்திகையும் நடந்தேறியது. நல்வாய்ப்பாக, அவர்கள் திட்டத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன்.

எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.  பதட்டமானேன், எனது குழந்தையின் பாதுகாப்புக்காக கொலை செய்யவும் தயாரானேன். ஆனால் சரியான சமயத்தில் என் உணர்ச்சிகளை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

அப்போது நான் புதிய திரைக்கதை ஒன்றை எழுதவேண்டியிருந்த சூழல்.  அதை நான் ஒரு மாதமாக தள்ளிப் போட்டு வந்தேன். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் எழுத உட்கார ஆரம்பித்தபோது, அது தானாகவே நடந்தது. ஒருவேளை என் பயமும், பீதியும், ஏதோ நடந்துவிடுமோ என்ற பிரமையும் அதற்கு உதவியிருக்கக் கூடும்” என்று கமல் தெரிவித்துள்ளார்.