ஷார்ஜா: முதன்முறையாக, ஒரு முஸ்லீம் தாய்க்கும், இந்து தந்தைக்கும் பிறந்த குழந்தைக்கு, பிறப்பு சான்றிதைழை வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம்.

அந்த நாட்டில் வாழும் புலம்பெயர்ந்தவர்களுக்கான திருமண சட்ட விதிகளின்படி, ஒரு முஸ்லீம் ஆண், வேறு மதத்துப் பெண்ணை மணக்கலாம். ஆனால், ஒரு முஸ்லீம் பெண், வேறு மதத்து ஆணை மணத்தல் கூடாது.

ஆனால், கேரளாவைச் சேர்ந்த கிரண் பாபு மற்றும் சானம் சபூ சித்திக் ஆகியோருக்கு கடந்த 2016ம் ஆண்டு கேரளாவில் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் குழந்தைப் பிறந்தது.

ஆனால், விதிகளை காரணம் காட்டி, அவர்களின் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் மறுக்கப்பட்டது. நீதிமன்றத்திலும் அந்த தம்பதிகளின் கோரிக்கை மறுக்கப்பட்டது. ஆனால், இந்திய தூதரக உதவியுடனான தொடர் முயற்சிகளின் மூலமாக, தற்போது 9 மாதமான அந்தப் பெண் குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

சமய சகிப்புத்தன்மையின் அடிப்படையிலான நல்லெண்ண முயற்சியாக இந்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.