டெல்லி:

லைநகர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து, கடந்த சில நாட்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், உயர்த்தப்பட்ட விடுதி  கட்டணத்தை வாபஸ் பெறுவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கல்விச் செயலாளர் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், ஜே.என்.யூ நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உயர்த்தப்பட்ட விடுதி கட்டணம் திரும்பப் பெறப்படுவதாகவும், மேலும் ஈ.டபிள்யூ.எஸ் மாணவர்களுக்கு பொருளாதார உதவிக்கான திட்டத்தையும் அறிவிப்பதாகவும் தெரிவித்து உள்ளது. மாணவர்கள் மீண்டும்  வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவிறுத்தி உள்ளார்.

டெல்லியில் ஜேஎன்யு பட்டமளிப்பு விழா கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் தலைமை விருந்தினராகக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி  பல்கலைக்கழகத்துக்கு வெளியே நடைபெற்றது.

அன்றைய தினம்,  விடுதிக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, பட்டமளிப்பு விழா நடைபெறும் ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி  பேரணி நடத்தப்படும் என்று ஜேஎன்யு மாணவர் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அறிவித்திருந்தது. அதையடுத்து  திங்கட்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் கூடிய மாணவர்கள், ஏஐசிடிஏ அரங்கம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

இதை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றனர். மேலும், தண்ணீரைப் பீச்சியடித்து அவர்களைக் கலைக்க முயன்றனர். ஆனால், காவல்துறையினரின் தடையை மீறி மாணவர்கள் பேரணியை தொடர்ந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போது உயர்த்தப்பட்ட மாணவர்களின் விடுதிக் கட்டணம் வாபஸ் பெறப்படுவதாகவும், மற்ற  கோரிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.