சென்னை,
தமிழகத்தில் திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக துணைப்பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
திமுக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மனிதசங்கிலி நாளை (27ந்தேதி) திமுக சார்பில் மாநிலம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்திருந்தது.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கு மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடுக்கப்பட்ட தீர்மான முடிவின்படி, வரும் 27. ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்நிலையில், திமுக நடத்த இருக்கும் மனித சங்கிலி போராட்ட த்திற்கு தடை விதிக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு, அவசர வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின்போது, திமுக போராட்டத்திற்க்கு இதுவரை அனுமதி தரவில்லை என்று தமிழக அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
அப்போது, கருப்பு பட்டை அணிந்து இடையூறு இல்லாமல் அமைதியாக போராடினால் எப்படி தடுக்க முடியும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுமக்களை போராட்டக்காரர்கள் தடுக்கும்போது காவல்துறை தலையிடலாம் என்று அவர் கூறியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடத்தினால்தான் அவமதிப்புக்குள்ளாகும் எனவும் இந்திரா பேனர்ஜி கூறி திமுக மனிதச்சங்கிலி போராட்டத்திற்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, திட்டமிட்டபடி போராட்டம் நடைப்பெறும் என திமுக துணைப்பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.