சென்னை,
த்திய அரசின் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதிக்குக் காரணமான மத்திய அரசைக் கண்டித்து  மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்து உள்ளார்.
dmk1
கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய நோட்டுக்கள் செல்லாது என்று மோடி அறிவித்ததை தொடர்ந்து, புதிய நோட்டுகள் மாற்றவும், பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யவும் பொதுமக்கள் அல்லாடி வருகின்றனர். கடந்த 10 நாட்களாகியும் இன்னும் பொதுமக்களின் சகஜநிலைக்கு தேவையான பணம் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகிறார்கள்.
இதன் காரணமாக மத்திய அரசு மீது அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுமக்களின் பரிதாபமான நிலைக்கு காரணமான மத்திய அரசையும், அதை கண்டிக்காத மாநில அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும்  வரும் 24ந்தேதி  மனித சங்கிலி போராட்டம் நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.

(பழைய படம்)
(பழைய படம்)

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மத்திய பா.ஜ.க. அரசு, “அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி”என்பதைப் போல  எந்தவிதமான முன்னேற்பாடோ,  உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,  500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என,  திடீரென்று 8-11-2016 அன்று மாலையில் செய்த அறிவிப்பின் காரணமாக  கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மக்கள் படும் துன்ப துயரங்களுக்கு அளவே இல்லை.
ஏழையெளிய மக்கள், அன்றாடங்காய்ச்சிகள்,  வேலைகளுக்கும்  செல்ல முடியாமல்,  தங்களிடம் உள்ள ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன்னால் பல மணி நேரங்கள் “கியூ”வில் நிற்கின்ற  கொடுமை கள் குறைந்தபாடில்லை.   வியாபாரிகள்  எந்தவிதமான  வியாபாரமும் இல்லாமல் தங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கும்  ஏழையெளிய, நடுத்தர மக்களின் துன்பங்களைக் களைய  நாடாளு மன்றத்தில் அனைத்துக் கட்சியினரும் வாதாடிய போதிலும்,  பிரதமர் மோடி அவர்கள் நாடாளுமன்றத்திற்கு வந்து எந்தப் பதிலும் கூறவில்லை.
மற்ற மாநில முதலமைச்சர்கள்  இந்தப் பிரச்னைக்காக மத்திய அரசை எதிர்த்து கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
human-chain
எனவே  தமிழகத்தில் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து, நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததால் ஏற்பட்டுள்ள இன்னல்களை நீக்க, உடனடியாக மத்திய அரசு உரிய அறிவிப்பு செய்ய வேண்டுமென்று கோரி,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும்  24-11-2016 வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில்,  அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில்  மாபெரும் மனிதச் சங்கிலி நடத்தப்படும்.  
இந்த மாபெரும் மனிதச் சங்கிலியில் கழகத் தோழர்களும், கட்சி சார்பற்ற பொது மக்களும்,  வணிகர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள்  உட்பட அனைவரும் பங்கேற்றிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.