சென்னை: சென்னை, யானைக்கவுனி துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் தராததால், மனைவியே, தன் கணவர் மற்றும் அவரது பெற்றோரை, கூலிப்படையுடன் சென்று, துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தகவல் வெளியானது. இந்த நிலையில்,  தப்பிச்சென்ற மருமகள் உள்பட  3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, சவுகார்பேட்டை விநாயக மேஸ்திரி தெருவில் வசித்து வந்தவர். தலித் சந்த் (வயது 74), அவரது மனைவி புஷ்பா பாய், (வயது 70). இவர்கள் மகன் ஷீத்தல் (வயது 40) இவர் அங்குள்ள  அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்தனர். தலித்சந்தின் மகள் பிங்கி, பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். தினமும், தந்தை வீட்டிற்கு இரவு நேரத்தில், உணவு கொண்டு செல்வது அவரது வழக்கம்.

அதன்படி, கடந்த 11ந்தேதி அன்று இரவு பெற்றோர் மற்றும் சகோதரருக்கு  உணவு கொண்டு சென்ற போது, கதவு வெளியில் தாழிடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிங்கி, பெற்றோர்கள் தன்னிடம் சொல்லாமல் எங்கே செல்ல மாட்டார்களே என்ற நினைப்பில், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது, படுக்கை அறையில், தந்தை, தாய் மற்றும் சகோதரர், துப்பாக்கியால் சுடப்பட்டு, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தனர்.

இதைக்கண்டு, அதிர்ச்சி அடைந்த பிங்கி  யானைகவுனி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த யானைக்கவுனி காவல்துறையினர், மற்றும்,  சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கைரேகை துறையினர், மற்றும்  உயரதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.  இந்த சம்பவம் அந்த பகுதி மட்டுமின்றி சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னையில் துப்பாக்கி கலாச்சாரம் பரவி வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், இறந்த  மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதில், மூவருக்கும், நெற்றியில் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது தெரியவந்தது.

அதுபோல, அந்த பகுதியில் உள்ள ‘சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், ஒரு பெண் உட்பட, ஆறு பேர் கும்பல்,  இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுதது, இறந்த ஷீத்தலின் மனைவி ஜெயமாலா குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஷீத்தலுக்கும், புனேயைச் சேர்ந்த ஜெயமாலாவிற்கும் திருமணமாகி, இரு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததும், ஷீத்தல் சென்னையில் பெற்றோருடனும், ஜெயமாலா, குழந்தைகளுடன் புனேவில் உள்ள தாய் வீட்டிலும் வசித்து வந்தனர்.ஜெயமாலா, விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் கேட்டு தொடுத்த வழக்கு, புனே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணையில்,  ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 29ந்தேதி, ஜெயமாலாவின் சகோதரர்கள்  மாறுவேடத்தில், ஷீத்தலின் வீட்டிற்கு சென்று,  தங்கை ஷீத்தல்  மற்றும் அவரது குழந்தைகளுக்கு, 5 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டு சண்டையிட்டதும், வாக்குவாதம் முற்றவே, ஷீத்தல் மற்றும் அவரது குடும்பத்தை கட்டிப்போட்டு, சரமாரியாக தாக்கி விட்டு,  தப்பிச் சென்றதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து,  அக்டோபர் 21ந்தேதி ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, அங்கு வந்து, 5 கோடி ரூபாய் கேட்டு, தகராறில் ஈடுபட்ட நிகழ்வுகளும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்தே,  ஜெயமாலா தன் சகோதரர்கள் இருவர், மேலும், மூவர் உட்பட ஆறு பேருடன் சென்று, கணவர், மாமனார், மாமியாரிடம், பணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளதும், அதைத்தொடர்ந்தே,  ஜெயமாலா கும்பல், ஷீத்தல், தலித் சந்த், புஷ்பா பாய் ஆகிய மூவரையும், துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு கொலை செய்து விட்டு, புனேவிற்கு ரயிலில் தப்பியது தெரியவந்தது.

அந்த கும்பலை பிடிக்க  தனிப்படை புனே விரைந்தனர். இந்த நிலையில், ஜெயமாலா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது.