மனைவியின் வயிற்றில் உதைத்து கர்ப்பம் கலைத்த குரூர கணவன்..

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சின்னமுளியனூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி- ரம்யா தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார்.

அந்தியூர் சந்தைக்கு அண்மையில் சென்ற முனுசாமி ,மரத்தடி ஜோதிடர் ஒருவரிடம் கை நீட்டி, தனது எதிர்காலத்தைக் கணித்துச் சொல்லுமாறு கேட்டுள்ளார்.

‘’ உனக்கு இரண்டாவது குழந்தை பிறந்தால் நீ செத்துப்போவாய்’’ என்று அந்த ஜோதிடர் கூற, அதிர்ச்சியில் உறைந்தார், முனுசாமி.

இது குறித்து மனைவி ரம்யாவிடம் தெரிவித்து கர்ப்பத்தைக் கலைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

ஆனால் ரம்யா மறுத்து விட்டார்.

ஆத்திரம் அடைந்த முனுசாமி இரு தினங்களுக்கு முன்பு குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

கர்ப்பத்தைக் கலைக்குமாறு மீண்டும் மிரட்டினார்.

ரம்யா ’’முடியவே முடியாது’’ என்று தீர்மானமாகக் கூறிவிட்டார்.

எரிச்சல் அடைந்த முனுசாமி, மனைவியின் அடி வயிற்றில் நான்கு முறை எட்டி உதைக்க, கர்ப்பம் கலைந்து போனது.

இது குறித்து ரம்யா ,அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் முனுசாமியைத் தேடி வருகிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்