பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், லீக் போட்டியொன்றில், சென்னை அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது ஐதராபாத் அணி.

மொத்தம் 5 கோல்கள் அடிக்கப்பட்ட இப்போட்டியின் முதல் பாதி ஆட்டம், கோல்கள் எதுவுமின்றி முடிந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பாதியில்தான் கோல் மழை பொழியத் தொடங்கியது.

இரண்டாவது பாதியின் 50வது நிமிடத்தில் ஐதராபாத்தின் ஜோயல் சியானேஸ் ஒரு கோலடிக்க, அதே அணியின் ஹாலிச்சரண் 53வது நிமிடத்தில் ஒரு கோலடித்து, தங்கள் அணிக்கு வலுவான முன்னிலையைக் கொடுத்தனர்.

இதற்கு பதிலடியாக, சென்னை அணியின் அனிருத் தபா ஒரு கோலடித்தார். ஆனால், சென்னை அணியால் அதற்குமேல் எதுவும் செய்ய முடியவில்லை.

ஐதராபாத் அணியின் ஜோவா விக்டர் 74வது நிமிடத்திலும், ஹாலிச்சரண் 79வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து தொட முடியாத இடத்திற்கு அந்த அணியைக் கொண்டு சென்றனர்.

இதன்மூலம், ஆட்டநேர முடிவில், ஐதராபாத் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றியை சுவைத்தது.