ஐதராபாத்:

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல போதை கும்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது. இந்த கும்பலிடம் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திரா திரையுலகத்தை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக 12 பேருக்கு சிஐடி போலீசார் சம்மன் அனுப்பினர். பிடிபட்ட போதை கும்பலிடம் இவர்களது போன் நம்பர்கள் இருந்ததால் விசாரணை வளையம் இவர்களை சுற்றி வளைத்தது.

இந்நிலையில் பிரபல நடிகை சார்மி கவுர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவரிடம் ரத்த மாதிரி எடுத்து சோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை மேற்கொள்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை இது போன்ற சோதனைகளை மேற்கொள்ளக் கூடாது’’ என்று அவர் தெரிவித்துள்ளார். இது போல் தெலுங்கு திரையுலகினர் பலரும் கலக்கத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.