ஐதராபாத்
மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி துவங்கி வைக்கிறார்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் மெட்ரோ ரெயில் அமைப்பின் முதல் கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் நான்கு மொழிகளிலும் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா பற்றி தெலுங்கானா அமைச்சர் ராமாராவ் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றி அறிவித்தார்.
அவர் “ ஐதராபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரெயிலின் முதல் கட்ட சேவையான 30 கிமீ தூர சேவையை பிரதமர் மோடி வரும் 28ஆம் தேதி மதியம் 2.15 மணிக்கு துவக்கி வைக்கிறார். இந்த சேவை 29ஆம் தேதி முதல் பொதுமக்களுக்காக இயங்கும். நகோலில் இருந்து மியாபூர் வரையிலான இந்த 30 கிமீ தூரத்துக்கு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ரெயில்கள் இயக்கப்படும். பிறகு தேவைப்பட்டால் இந்த வேலை நேரத்தை காலை 5.30 முதல் இரவு 11 வரை மாற்றி அமைக்கப்படும்.
இந்த சேவைக்காக 57 ரெயில் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு ரெயிலிலும் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டியிலும் 330 பேர் வீதம் பயணம் செய்யக் கூடியதாக இந்த ரெயில் இருக்கும். விரைவில் இந்த ரெயில் 6 பெட்டிகள் கொண்டதாக மாற்றப்படும். விரைவில் மெட்ரோ ரெயிலுக்கான 2 ஆவது கட்டப் பணிகள் துவங்க உள்ளது.” எனத் தெரிவித்தார்.