சென்னை:

மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறுவனங்கள் செயல்படுத்த முனைந்தால், அந்த நிறுவனங்கள் மீது  கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது தமிழக சட்ட அமைச்சர்  சி.வி. சண்முகம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்

தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கப்பட்டு இருபபதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை தமிழக அரசு கொள்கை முடிவாக எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும், இதே கூட்டத்தொட ரில் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்,  “ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் கொள்கை முடிவெடுக்கவேண்டிய அவசியம் இல்லை; ஹைட்ரோ கார்பன் திட்டம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்!” என்று கூறினார்.

மேலும்,  தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது என்றவர், இந்த விவகாரத்தில், அரசியலுக்காக போராட்டம் நடத்தினால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பேசக்கூடாது என கூறினார்.

அதையடுத்து பேசிய  அமைச்சர் சி.வி. சண்முகம்,  திட்டத்தை சட்டரீதியாக நிறுத்தவும், தடுக்கவும், சம்பந்தபட்டவர்கள் மீறும்போது, நடவடிக்கை எடுக்கவும் நமக்கு உரிமை இருக்கிறது, அப்படி இருக்கும்போது எதற்காக போராட்டம் நடத்த வேண்டும். வான்டடாக (Wanted) சிறைக்கு செல்பவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என்று கூறியவர், மாநில அரசை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முனைந்தால், அந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.