ஸ்லாமாபாத்

தாம் நோபல் பரிசுக்கு தகுதியானவர் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார்.

கடந்த வாரம் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் விமானப்படையினரை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார்.   அவரை உடனடியாக விடுவிக்க உலக நாடுகள் அழுத்தம் கொடுத்தன.  அதன் காரணமாக பாகிஸ்தானின் இம்ரான் கான் அரசு அவரை விடுதலை செய்தது.

இதை ஒட்டி பல ஊடகங்கள் இம்ரான் கானுக்கு புகழாரம் சூட்டின.  இந்தியாவில் உள்ள பல தலைவர்களும் அவரை பாராட்டி செய்தி வெளியிட்டனர்.   பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு  இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தானியர்கள் பலர் டிவிட்டரில் #NobelPeacePrizeForImranKhan எனவும் #PakistaniLeadsWithPeace எனவும் ஹேஷ்டாகுகள் இட்டுள்ளனர்.  இது ஆயிரக்கணக்கில் பதியப்பட்டு டிரண்ட் ஆகி வருகிறது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் நோபல் பரிசு பெற தகுதியானவன் இல்லை.  துணை கண்டத்தில் காஷ்மீர் மக்கள் விருப்பத்தின்படி அமைதியையும் வளர்ச்சியையும் யார் ஏற்படுத்துகிறார்களோ அவர்களே அந்த நோபல் பரிசுக்கு தகுதியானவர்கள்” என பதிந்துள்ளார்.