பெங்களூரு:

13 மாதங்கள் நீடித்த குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி  அரசு, நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால், ஆட்சி  கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி  உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் என குமாரசாமி என சிலாகித்து உள்ளார்.

அவரது பேச்சு,கடந்த 13 மாதங்களாக முதல்வர் பதவியில் அமர்ந்து, அவர் அனுபவித்து வந்த அரசியல் சோதனைகளுக்கு விடிவு காலம் பிறந்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஜேடிஎஸ் கட்சி ஆட்சி அமைத்தது. அவர்களுக்கு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு கொடுக்க 119 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் முதல்வராக குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

அவர் பதவி ஏற்றது முதல், ஆதரவு எம்எல்ஏக்கள் பதவி வேண்டிய அவருக்கு குடைச்சல் கொடுத்து அவ்வப்போது ஆட்சியை கவிழ்ப்பதாக மிரட்டி வந்த நிலையில், சமீபத்தில் 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை  சபாநாயகரிடம் தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஆட்சி கவிழ்ப்புக்கான வேலைகள் தீவிரமாக தொடங்கின.

இதையடுத்து குமாரசாமி அரசு மீது நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில்,  அரசுக்கு ஆதரவாக 99 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகள் பதிவாகின. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து, முதல்வர் பதவியை  ராஜினாமா  செய்து, அதற்கான கடிதத்தை ஆளுநர் வஜூபாய் வாலாவிடம் அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, தற்போதுதான் நான் நிம்மதியாக இருக்கிறேன்.

இதையடுத்து, முதல் மந்திரி குமாரசாமியின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டது என ஆளுநர் வஜூபாய் வாலா அறிவித்தார்.

இது குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் என்பதை உணர்கிறேன் என்று கூறினார்.

மேலும், தற்போதைய சூழ்நிலைகளால், நான் ஓய்வு பெறமாட்டேன் என்று கூறியவர், தொடர்ந்து போராடுவேன். பொறுத்திருந்து பாருங்கள்’ என கூறினார்.