பெங்களூரு:

அரசியலில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கூறி உள்ளார். இது ஐக்கிய ஜனதாதளம் கட்சி தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் கர்நாடக மாநிலத்தில் சுமார் 13 மாதங்களாக ஆட்சி நடத்தினார். அவர் பதவி ஏற்றது முதலே காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் கட்சி  எம்எல்ஏக்கள் பதவி வேண்டி அவருக்கு குடைச்சல் கொடுத்து மிரட்டி வந்த நிலையில், சமீபத்தில் 15 அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை  சபாநாயகரிடம் தாக்கல் செய்ததை தொடர்ந்து, ஆட்சி கவிழ்ப்புக்கான வேலைகள் தீவிரமாக தொடங்கின.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 6 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஆட்சியை பறி கொடுத்தார். அவரது ஆட்சி பாஜக மட்டுமல்லாது, காங்கிரஸ் மற்றும் தனது கட்சியை சேர்ந்த நம்பிக்கை துரோக எம்எல்ஏக்களால் கவிழ்க்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ‘நான் நிம்மதியாக இருக்கிறேன். உலகின் மிகவும் மகிழ்ச்சியான மனிதன் இப்போது நான்தான் என்பதை உணர்கிறேன் என்றும், தற்போதைய சூழ்நிலைகளால், நான் ஓய்வு பெறமாட்டேன் என்று கூறியவர், தொடர்ந்து போராடுவேன். பொறுத்திருந்து பாருங்கள்’ என கூறினார்.

இந்த நிலையில், இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, அரசியலில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். தான் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்று கூறியவர், தற்போதைய அரசியல் சூழல் மிக மோசமாக இருப்பதாக கூறினார்.

தான் முதல்வர் பதவியில் இருந்தபோது மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன்… அந்த மன நிம்மதியுடன் அரசியலில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.

குமாரசாமியின் இந்த அறிவிப்பு ம.ஜ.த கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.