சென்னை,

டிகர் சிம்புவை வைத்து படம் தயாரித்ததால், இன்று  வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன் என்று தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புலம்பியுள்ளார்.

சிம்புவை வைத்து  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை தயாரித்தவர், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இவர் தேமுதிகவில் உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே கடந்த 2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

இவர்,  குளோபல் இன்போடெயின்மென்ட் நிறுவனம் என்ற பெயரில் தமிழ்த் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். நாடோடிகள், கோரிப்பாளையம், சிந்து சமவெளி உள்ளிட்ட திரைப்படங்களை  தயாரித்துள்ளார்.

இவர் சமீபத்தில், நடிகர் சிம்புவை வைத்து,  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார். இந்த படம் பெரும் தோல்வியை சந்தித்து. இதன் காரணமாக, தனது வீடு வசதிகளை இழந்து தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்.

இந்த படம் தயாரிப்பால் தனக்கு நடிகர் சிம்புவால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து, தயாரிப்பு சங்கத்திலும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் புகார் கூறி உள்ளார்.

இதுகுறித்து,  தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியதாவது,

நடிகர் சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற திரைப்படம் தயா ரித்தேன். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் தோல்வியை அடைந்தது.

இந்த படத்தில் நடிக்க படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும், சிம்பு கேட்டுவிட்டே நடிக்க ஒப்புக்கொண் டார். ஆனால், படப்பிடிப்பின்போது அவர் ஒத்துழைக்க மறுத்து வந்தார். படப்பிடிப்புக்கு சரியான முறையில் தேதிகள் வழங்காமல் படப்பிடிப்பை இழுத்தடித்தார்.

மேலும், ஏற்கனவே அவருக்கு கொடுத்த ஸ்கிரிப்ட் படியும் படத்தை எடுக்கவிடாமல் குறுக்கீடு செய்தார். பாதி படம் நடித்துக்கொண்டிருந்தபோது, இந்த படத்தை இரண்டு பாகங்களாக தயாரிக்க லாமே என்றும், அதற்கு நான் பொறுப்பேற்கிறேன் என்றும், இரண்டாவது பாகத்தை சம்பளம் இல்லாமல் நடித்து தருகிறேன் என்றும் கூறினார்.

அதுபோல இந்த படத்திற்கு சிம்புக்கு அவர் கேட்ட சம்பளம் அப்படியே வழங்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி  தியேட்டர்களில் ஓடாமல் பெரும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.

படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டத்தை ஈடுகட்டச்சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள். சிம்புவை வைத்து  இந்த படம் தயாரித்ததால், நான்  வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிறேன். தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு சிம்புதான் பொறுப்பு ஏற்க வேண்டும்.

சங்கத்தில் அளித்துள்ள புகாரின்போது,  நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். ஒரு மாதம் ஆகியும் இதற்கு தீர்வு ஏற்படவில்லை. சிம்புவிடம் நஷ்ட ஈடு பெற்றுத்தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.