தமிழில் அறிமுகமாகி மலையாள சினிமா உலகில் கொடி கட்டிப்பறந்தவர், நடிகை ஷகீலா.

ஷகீலா படம் வெளியாகும் நேரத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களை வெளியிடுவதை தவிர்த்த நிகழ்வுகளும் உண்டு.

அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் படம் ‘ஷகீலா’ என்ற பெயரிலேயே தயாராகியுள்ளது. இந்த படத்தில் ஷகீலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

“சில்க் ஸ்மிதாவின் திடீர் மரணத்தால், சினிமா உலகில் முக்கியத்துவம் பெற்றவர் ஷகீலா. ஆணாதிக்கம் மிகுந்த தென் இந்திய சினிமாவில், நடிகர்களால் சினிமாவில் சீர்குலைவுக்கு ஆளான ஷகீலா வேடத்தில் டைட்டில் ரோலில் ‘ஷகீலா’ படத்தில் நான் நடித்துள்ளேன்” என்று தெரிவித்த ரிச்சா சத்தா, படங்களை தேர்வு செய்வது குறித்து அதிரடி கருத்து வெளியிட்டுள்ளார்.

“ஒரு படத்தின் கதை பிடித்திருந்ததால் அதில் நடித்ததாக நான் சொல்ல மாட்டேன். எந்த நடிகையும் அப்படி சொல்ல முடியாது. பல்வேறு விஷயங்களை மனதில் கொண்டே ஒரு படத்தில் நடிக்க நடிகைகள் ஒப்புக்கொள்கிறார்கள். சிலர் காசுக்காக நடிக்கலாம். சிலர் சினிமா மீதான காதலால் நடிக்கலாம்.

சினிமாவில் ஒருவருடன் உறவை வலுப்படுத்தி கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் படத்தில் நடிப்போரும் உண்டு.

நானே கூட பல சந்தர்ப்பங்களில் பணத்தேவைக்காக நடித்துள்ளேன்” என பேட்டி அளித்துள்ளார், ‘ஷகீலா’ பட நாயகி.

– பா. பாரதி