சென்னை:
உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என்று திமுக சார்பில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் உள்ள திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணியில் அதிக உறுப்பினர்களை சேர்த்த நிர்வாகிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகனும் ,திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் திமுக உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, உதயநிதி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நன்றாக உழைப்பார் என்றும், நான் கருணாநிதியிடம் வாங்கிய பெயரை உதயநிதி என்னிடம் வாங்குவார் என எதிர்பார்க்கிறேன் என்று கூறினார்.
மேலும், இளைஞரணியில் விரைவில் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பார்கள் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் 30லட்சம் இளைஞர்களை திமுக இளைஞர் அணியில் சேர்க்க வேண்டும் என்ற பணியில், தனது பொறுப்பிற்குட்பட்ட பகுதியில் 1,21,000 இளைஞர்களை சேர்த்துள்ள மா.சுப்பிரமணியன் அவர்களை வாழ்த்துகிறேன்! மா.சு.வை விஞ்சும் வகையில் மற்ற மாவட்டச் செயலாளர்களும் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று வாழ்த்தினார்.
விழாவில், திமுக இளைஞரணியில் 1,20,000க்கும் மேலான உறுப்பினர்களை சேர்த்துள்ள சென்னை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கினார்.