சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தீபா, தனக்கு கணவர் இல்லை என்று மனுவில் தெரிவித்துள்ளது அதிர்ச்சி உள்ளது.

தீபா – மாதவன்

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவை அடுத்து, அவர் போட்டி வென்ற ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இத் தேர்தலில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும்  போட்டியிடுகிறார். இவர், “எம்.ஜி.ஆர். – அம்மா – தீபா பேரவை” என்ற அமைப்பை சமீபத்தில் துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பில் நிர்வாகிகளை நியமிப்பதில் அவருக்கும் அவரது கணவர் மாதவன் ஆகியோரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து மாதவன், தனிக்கட்சி துவங்கப்போவதாக அறிவித்தார். பிறகு, “தீபாவை தமிழகத்தின் முதல்வர் ஆக்குவதே லட்சியம்” என்றார்.

(உறுதிமொழிப் பத்திரம்:  17539_89DEEPA)

இந்த நிலையில், தீபா, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட  வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் கணவர் பெயரைக் குறிப்பிடவில்லை.

“ஜெயக்குமார் என்பவரின் மகளாகிய  ஜெ. தீபா என்கிற நான்” என்றே குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுவில் தங்களது வாழ்க்கைத் துணைவர் பற்றியும், சொத்துக்கள் குறித்தும், வழக்குகள் ஏதும் நிலுவையில் இருக்கிறதா என்பது பற்றியும் குறிப்பிடுவது அவசியம்.

இது குறித்து சட்டவல்லுநர்கள், “தீபா – மாதவன் இடையே சட்டபூர்வமான திருமண பந்தம் இருந்தால் அதைக் குறிப்பிடுவது அவசியம். அதோடு சட்டப்பூர்வ வாழ்க்கைத்துணையின் சொத்துக்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டியிருக்கும்.

ஒருவேளை சட்டப்பூர்வமான வாழ்க்கைத்துணை இல்லை என்றால் பிரச்சினை இல்லை” என்று தெரிவிக்கின்றனர்.

ஆக, தீபாவின் வேட்புமனு(வும்) சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.