புதுடெல்லி: தான் உலக நாடுகளின் தலைவர்களிடம் பேசத் தொடங்கும் ஒவ்வொரு முறையும் யோகா என்பதிலிருந்துதான் பேச்சு துவங்குகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும், கிட்டத்தட்ட தான் சந்தித்த ஒவ்வொரு உலக தலைவரும் தன்னிடம் யோகா குறித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவித்தார் மோடி. யோகா விருதுகளை வழங்கும் விழாவில் கலந்துகொண்ட மோடி இவ்வாறு பேசினார்.

பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “நான் உலக நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, நான் சந்திக்கும் தலைவர் எவ்வளவு பெரியவரோ அல்லது சிறியவரோ என்ற வேறுபாடின்றி, அவருடன் பேசத் தொடங்கும்போது, எங்களின் பேச்சு யோகாவிலிருந்துதான் தொடங்கும்.

யோகாவைப் பற்றி என்னிடம் 5 முதல் 10 நிமிடங்கள் பேசாத தலைவர்கள் மிகவும் அரிதே. சிலர் யோகாவை கற்றுக்கொள்ள விரும்புவார்கள். அவர்களுக்கு நான் யோகா தொடர்பான புத்தகங்களை அனுப்பியுள்ளேன். சிலர், தங்களின் சொந்த முயற்சியிலேயே யோகாவை பயிற்சி செய்துள்ளனர்” என்றார் மோடி.