சென்னை:

லைமறைவாக இருந்து வரும், நித்தியானந்தா, தினசரி ஒவ்வொரு வீடியோவாக யுடியூடிபில் வெளியிட்டு காமெடி செய்து வருகிறார். இந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைத்துவிட்டேன் என்று கூறி உள்ளார்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாகி உள்ள சுவாமி நித்தியானந்தா, சமீபத்தில் குழந்தைகளை கடத்தியதாக எழுந்த புகாரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது தலைமறைவாக உள்ள நித்தி, தினசரி ஆன்லைன் மூலம் சத்சங்கம் நடத்தி வருகிறார். மேலும் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு, காமெடிகளை அரங்கேற்றி வருகிறது.

நித்தியை குஜராத் காவல்துறையினர் வலைவீசி தேடி வரும் நிலையில், நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி விட்டார் என்றும், அவர் ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி அதை ‘கைலாசா’ என்ற பெயரில் தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றனர்.

அதற்கேற்றார்போல, தான் கைலாசாவில் இருப்பதாகவும், ‘கைலாசா’ நாட்டின் குடியுரிமை கேட்டு இதுவரை 40 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதாகவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,  என் மீது கோபப்படும் நபர்களிடமிருந்து காத்துக் கொள்ளவே பாதுகாப்பான இடமாக கைலாசாவை அமைத்துள்ளேன். ஆகாயத்தில் பதிவாகி உள்ள கடவுளின் பதிவுகளை வாசிக்கும் போது அவை தங்க நிறத்தில் தோன்றுகிறது. என் மீதும், என் செயல்கள் மீதும் சீடர்கள் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம் என்று கூறியவர்,தமிழக காவல்துறையினரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

வழக்கமாக என்னை அவ்வப்போதுதான் வைச்சு செய்வார்கள். ஆனால் சமீப காலமாக தொடர்ந்து வச்சி செய்கிறிதர்கள்….  கடுமையாக சிலர் விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளவர்,  2 வருடத்துக்கு முன்பு நாட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கு எனது பெயரை பயன்படுத்துவார்கள்.

புதிதாக ஏதாவது ஒரு  கதையை கிளப்பி விடுவார்கள். அடி அடி என்று அடிப்பார்கள். இரண்டு கேசை போடுவார்கள். அங்கும் இங்கும் அலைக்கழிப்பார்கள். அடிக்கும் போதே நடுவில் இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன் என்று ஒரு வார்த்தை சொல்வார்கள் என்று காமெடியாக கூறியவர்,

நானும் அதை சரியென்று கேட்டு நம்மை நல்லவன் என்று சொல்லிட்டாங்களே என அவர்கள் என்ன செய்தாலும் தாங்கிக்கிட்டு அப்படியே இருப்பேன் என்று நக்கலாகவும் கூறி உள்ளார்.

நாலு பேரு நாலு விதமா நாலு வி‌ஷயத்தை பேசினால் அது நாடு. அந்த நாலு பேருமே நாலு விதமாக நித்யானந்தாவை பற்றி மட்டுமே பேசினால் அது தமிழ்நாடு. என்னய்யா இது. உங்களுக்கே இது நல்லாயிருக்கா? இது அடுக்குமா? இது தர்மம்தானா? என்று தமிழக மக்களையும் சீண்டி உள்ளார்.

என்னை காமடி பீஸ் மாதிரி காட்ட முயற்சி செய்வது நீங்கள். உங்களையும், என்னையும் இனிமையோடு இணைத்து உணர்கிறீர்கள். உங்கள் எல்லோருக்குள்ளேயும் காமெடி இருக்கிறதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். உங்கள் தன்மையோடு என் தன்மை ஒத்து போகும் போது நீங்களும், நானும் ஒன்று என்று உணர்கிறீர்கள்  என்று தத்துவத்தை உதிர்த்துள்ள நித்தி, தற்போது தனது சொத்துக்களை உயில் எழுதி வைத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.

தனது ஆசிரமத்துக்கு சொந்தமான சொத்துகள் அனைத்தும் யாருக்கு சேர வேண்டும் என உயில் எழுதி வைத்திருப்பதாக யு-டியூப்பில் உரையாற்றிய நித்தி தெரிவித்து உள்ளார்.

நித்தியானந்தாவுக்கு, தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் இடங்கள் உள்ள நிலையில், கர்நாடகம், குஜராத் என பல மாநிலங்களிலும் இடங்கள் உள்ளன. மேலும் சில வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளது. இவ்வளவு சொத்துக்களையும் உயில் எழுதி வைத்துவிட்டதாக நித்தியானந்தா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.