லாகூர்: இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப்பன்ட், இடதுகை பேட்டிங் ஆடும் வீரேந்திர சேவாக் போன்று தன் கண்களுக்கு தெரிவதாக பாராட்டியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

அவர் கூறியுள்ளதாவது, “ரிஷப் பன்ட் அட்டகாசமாக ஆடுகிறார். ஆட்டத்தில் இருக்கும் அழுத்தம் சுத்தமாக பாதிக்காத ஒரு வீரரை நீண்ட நாட்கள் கழித்து நான் பார்க்கிறேன். 146 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையிலும் கூட அவர் ஆடியதுபோல யாராலும் முடியாது.

களம் எப்படி இருந்தாலும், எதிரணி எவ்வளவு ரன்கள் சேர்த்திருந்தாலும் அவர் தனது ஆட்டத்தை ஆடுகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவரையும் சிறப்பாக எதிர்கொள்கிறார். அவர் ஆட்டத்தை ரசித்துப் பார்த்தேன். சேவாக் இடது கையில் ஆடுவதைப்போல இருந்தது.

நான் சேவாக்குடன் ஆடியிருக்கிறேன். அவர் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டார். களம் எப்படி, எதிரணிப் பந்துவீச்சு எப்படி என்று எதையும் பார்க்காமல் அடிப்பார்.

பவுண்டரியில் ஃபீல்டர்கள் இருந்தாலும் அடிப்பார். அவருக்குப் பிறகு, எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு வீரரை இப்போது பார்க்கிறேன்” என்றுள்ளார் இன்சமாம்.