டெல்லி:

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது, காவல்துறையின் தாக்குதலால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடை பெற்று வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த போராட்டங்கள்  உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் வன்முறையாக  மாறியது. இதையடுத்து, காவல்துறையினர் துப்பாக்கி சூடும் நடைபெற்றது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஏராளமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உ.பி.யில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை, மாநில அரசின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காகாந்தி  சந்தித்து ஆறுதல் கூறினார். அதுபோல,  அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ராகுல் காந்தி, ஆறுதல் கூறினார்.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்,

இந்தியா முழுவதும், CAA க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பல இளைஞர்கள் மற்றும் பெண்கள் காயமடைந்து கொல்லப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பங்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும். தங்களால் இயன்ற அளவு வழங்குமாறு காங்கிரஸ் கட்சித் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள் கிறேன்.

சனிக்கிழமையன்று அசாமில் 2 இளம் தியாகிகளின் குடும்பங்களை சந்தித்தேன்.

என்று  கூறியுள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பான வீடியோக்களையும் அவர் டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார்.

இதேபோல் ராகுல்காந்தி மற்ற மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.