மும்பை: இன்றைக்கு ரோகித் ஷர்மா எப்படி ஆடுகிறாரோ, அப்படித்தான் எனது காலத்தில் நான் ஒருநாள் போட்டிகளில் ஆட விரும்பினேன் என்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர்.

இதுகுறித்து கவாஸ்கர் கூறியுள்ளதாவது, “எந்தவிதமான கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, துவக்கத்திலிருந்து விளாசத் தொடங்கி விடுகிறார் ரோகித் ஷர்மா. இதைப்போன்றுதான் எனது நாட்களில் ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்கு நான் விரும்பினேன்.

ஆனால், போதிய தன்னம்பிக்கை இல்லாத காரணத்தாலும், சூழ்நிலைகள் அனுமதிக்காததாலும் நான் நினைத்ததை செய்ய முடியவில்லை. ஆனால், எனது அடுத்த தலைமுறை வீரர்கள் இப்படி செய்வதைப் பார்க்கையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஏனெனில், அவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். தங்களுக்குப் பின்னால் வருவோருக்கு வழிகாட்டுவோராக இருக்கின்றனர்” என்றுள்ளார் கவாஸ்கர்.

ஒருநாள் போட்டிகளில், உலகிலேயே 3 இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் ரோகித் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.