சென்னை:

குடியரசு தலைவர் தேர்தலில் வி.கே. சசிகலா யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவர்களுக்கே வாக்களிக்கப்போவதாக திருவாடானை எம்.எல்.ஏவும் நகைச்சுவை நடிகருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இன்று அதிமுக (அம்மா)அணி துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை கருணாஸ் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “மரியாதை நிமித்தம் டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன்” என்றார். மேலும், “என்னை ஜெயலலிதாவுக்கு அறிமுகப்படுத்தி திருவாடானை தொகுதியில் நான் போட்டியிடுவதற்குக் காரணமாக இருந்தவர் வி.கே. சசிகலாதான்.  ஆகவே வரும் குடியரசு தலைவர் தேர்தலில் சசிகலா யாருக்கு ஓட்டுப்போடச் சொல்கிறாரோ அவர்களுக்கே நான் வாக்களிபபேன். நான் சசிகலாவுக்கு கட்டுப்பட்டவன்” என்று தெரிவித்தார்.