சென்னை,

ல்லிக்கட்டு போட்டியை மக்கள் விருப்பப்படி நானே தொடங்கி வைப்பேன் என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இன்று மதியம் சென்னை திரும்பிய தமிழக முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4வது நாளாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் தவிர்த்து பொதுமக்களும் ஏராளமான அளவில் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து, தமிழக முதல்வர் ஓபிஎஸ் டெல்லிசென்று பிரதமரை சந்தித்து,

ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால், அவர் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் ஏதும் செய்ய இயலாது என்று கைவிரித்து விட்டார்.

பின்னர் டெல்லியில் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றுவது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.

தற்போது, அந்த சட்ட முன்வடிவு  ஜனாதிபதி ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகத்தால் ராஷ்டிரபதி பவனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று மதியம் சென்னை திரும்பிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

“ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த அவசர சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான அவசர சட்ட வரைவு இன்று மாலை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் அவசர சட்டம் பிறப்பிக்கப்படும்.

வாடிவாசல் விரைவில் திறக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்.ஜல்லிக்கட்டுக்கு தடை வர இனி வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தால் அதனை நீக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்” என்றார்