சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும், அதுகுறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் ஏற்பாடு செய்து உள்ளார். அது தொடர்பான அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், “காவிரி விவகாரம் தொடர்பான கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ள கூட்டத்தில் நான் பங்கேற்க மாட்டேன். நடிகர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்பதில்லை” எனக் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வரும் 19ந்தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு கமல் ஏற்பாடு செய்துள்ளார்.  காவிரிக்கான தமிழகத்தின் குரல்  என்று  பெயரிடப்பட்டுள்ள அந்த கூட்டத்தில்  பங்கேற்குமாறு  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இந்த கூட்டத்தில் பங்கேற்க விஜயகாந்த், தமிழிசை, டிடிவி தினகரன், வேல்முருகன், பாலகிருஷ்ணன் மற்றும் நடிகர் ரஜினியையும்  அழைக்க இருப்பதாக  கமல்ஹாசன் தெரிவித்தார்.

தமிழக மக்களின் நலன் என்ற ஒரு கொள்கையின் கீழ் பல கட்சித் தலைவர்கள் இணையவேண்டும் என்றும், அனைத்துக் கட்சி தலைவர்களும் சேர்ந்து நமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய சூழல் இது  என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கமல்ஹாசன் கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்து உள்ளார். அதுபோல கம்யூனிஸ் கட்சிகளும் கமலின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என்று அறிவித்து உள்ளது.