குறுகிய காலத்தில் செய்யப்பட்டதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் என்று ஜெயலலிதா சிலையை செய்தி சிற்பி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அவரைப் போல் இல்லை என்ற சர்ச்சை எழுந்திருக்கிறது.

இந்தநிலையில் சிலையை செய்த ஆந்திரா மாநில சிற்பி பி.எஸ்.வி.பிரசாத் தற்போது ஜெயலலிதாவின் சிலையை சீரமைத்து தர முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

“ஜெயலலிதாவின் சிலை வெண்கலத்தால் செய்யப்பட்டதாகும். 20 நாட்களுக்கு முன்பு தான் எனக்கு இதற்கான ஆர்டர் அளிக்கப்பட்டது.  முதலில் களிமண்ணால் மாதிரி சிலை செய்யப்பட்டது. அதற்கு 3 நாட்கள் ஆனது. களிமண் சிலை மாதிரியில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. இதையடுத்து வெண்கலத்தில் சிலை உருவாக்கப்பட்டது. இரவும் பகலுமாக பாடுபட்டு இந்த சிலை உருவாக்கப்பட்டது.

குறுகிய காலம் என்பதால் சிலை வேகமாக தயாரிக்கப்பட்டது. சிலை தோற்றம் குறித்து சர்ச்சை எழுந்திருப்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.  சமூக வலைதளங்களில் இது தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

ஆகவே ஜெயலலிதா சிலையை சீரமைத்து தர முடிவு செய்துள்ளேன். எனது சொந்த செலவில் அந்த சீரமைப்பு பணியை செய்ய தீர்மானித்துள்ளேன்.

சிலை செய்து முடித்தபோது அதை பல்வேறு கோணங்களில் படமாக எடுத்து அ.தி.மு.க. தலைவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு ஒப்புதல் அளித்தனர். அதன் பிறகே சிலையை சென்னைக்கு எடுத்து வந்தேன்.

இந்த லையை உருவாக்க நானும், எனது சகோதரன் காமதேனு பிரசாத்தும் மற்றும் 20 ஊழியர்களும் அரும்பாடு பட்டோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம். நாங்கள் செய்த தவறை நாங்களே சரி செய்து கொடுக்க தயாராக உள்லோம்” என்று அவர் தெரிவித்தார்..