லண்டன்:

.சி.சி கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் இங்கிலாந்தில்,  கடந்த மே மாதம் 30ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு முறை (1983 மற்றும் 2011)  உலக கோப்பையை கைப்பற்றி உள்ள இந்திய அணி, இந்த முறையும் உலக கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற அனுபவம் குறித்து இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நினைவு கூர்ந்துள்ளார்.

2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டிகள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி  இறுதிக்கு சென்ற நிலையில், ஆஸ்திரே லியா கிரிக்கெட் அணியிடம்  தோல்வியடைந்து உலக கோப்பையை தவறவிட்டது.

அந்த உலக கோப்பை போட்டியின்போது, இந்திய பவுலர், ஹர்பஜன் சிங்கும், பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப்பும் உணவு சாப்பிடும் சாப்பிடும் முள் கரண்டியுடன் (forks)  கைகலப்பில் ஈடுபட்ட சம்பவத்தை ‘அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் சிரிப்பாக இருக்கிறது’  ஹர்பஜன் சிங் தற்போது நினைவு கூர்ந்துள்ளார்.

இந்தியாவுக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையே அப்போது  சென்சூரியன் நகரில் போட்டி நடைபெற்றது.  அன்றைய ஆட்டத்தில் எனக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு விட்ட நிலையில், அன்றைய தினம் நடைபெற்ற போட்டியில்   பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. 274 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.   தொடக்க ஆட்டக்காரராக சச்சின் களமிறங்கி பந்துகளை சுழற்றி வந்த நிலையில் 98 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து, யுவராஜ் சிங் 50, திராவிட்44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து 6 விக்கெட்டில் பாகிஸ்தான்  அணியை துவைத்து எடுத்து வெற்றி பெற்றதாக ஹர்பஜன் தெரிவித்து உள்ளார்.

அந்தப் போட்டியில் என்னை அணியில் சேர்க்காமல் ஓய்வுக்கு அனுப்பிய அணி நிர்வாகம்,  அணில் கும்ப்ளேவை சேர்ந்திருந்த நிலையில், அன்று மதியம்  நான், ஸ்ரீநாத், கும்ப்ளே, ராகுல் திராவிட் அனைவரும் ஒரு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம், அருகில் உள்ள மற்றொரு மேஜையில் பாகிஸ்தான் வீரர்கள் முகமது யூசுப், ஷோயிப் அக்தர், சயித் அன்வர், வாசிம் அக்ரம் ஆகியோர் அமர்ந்து உணவருந்திக்கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் நான், தமாசாக பேசத் தொடங்கினேன். அதைகேட்ட அக்தரும், முகமது யூசுப்பும் பஞ்சாபி மொழியில் ஏதோ பேசினார்கள்.அவர்கள் பேசியது எனக்கு புரிந்தது. முதலில் என்னையும், என் மதத்தைப் பற்றி விமர்சித்தார்.

இதனால் கோபம் தலைக்கேறிய நிலையில், யூசுப்பின் காலைப் பற்றி இழுத்தேன். அவரும் என் காலைப் பிடித்து இழுக்க இருவரும் எழுந்து சண்டைக்கு தயாரானதாகவும்,  சாப்பிடப் பயன்படும் முள்கரண்டியை கையில் எடுத்துக்கொண்டு முகமது யூசுப்பை நோக்கி நகர்ந்தேன், அதுபோல, அவரும் என்னை நோக்கி வந்தார் இதைக்கண்ட சக வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இதைக்கண்ட பாகிஸ்தான் வீரர்கள்  வாசிம் அக்ரம், சயித் அன்வர் ஆகியோர் முகமது யூசுப்பை அங்கிருந்து பிடித்து இழுத்து வெளியே அழைத்துச் சென்றனர். அதுபோல என்னை திராவிட்டும், ஸ்ரீநாத்தும் அமைதியாக அமர வைத்தனர். இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது என்று   தெரிவித்து உள்ளார்.

சுமார்  16 ஆண்டுகளுக்குப் பிறகு,  இப்போது நானும், முகமது யூசுப்பும் சந்தித்தபோது, அந்த பழைய சம்பவங்களை நினைத்து நினைவுகூர்ந்து சிரித்ததாக தெரிவித்துள்ள ஹர்பஜன், களத்துக்கு வெளியே பாகிஸ்தான் வீரர்களுடன் நாங்கள் நட்புறவோடு இருப்போம். குறிப்பாக எனக்கு அக்தரிடமும், அப்ரிடியிடமும் நல்ல நட்பு உண்டு. நாங்கள் பஞ்சாபி மொழில் பேசிக்கொள்வோம். ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு இருக்கிறோம். இசை, இலக்கியம், புத்தகம் குறித்து அதிகமாகப் பேசி இருக்கிறோம் என்றும் தெரிவித்து உள்ளார்.

ஆனால், மைதானத்தில் நுழைந்து விட்டால், நாங்கள் வேறு, வேறு. நட்பைத் ஒதுக்கி விட்டு, களத்தில் நுழைவோம்’ என்பதையும் ஹர்பஜன் சுட்டிக்காட்டி உள்ளார்.