டில்லி

த்திய அரசு அனுமதித்தால் மூன்றே மாதத்தில் டில்லி மக்கள் அனைவருக்கும் மொரோனா தடுப்பூசி போடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.  தலைநகர் டில்லி அகில இந்திய அளவில் 6 ஆம் இடத்தில் உள்ளது.  இங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டரை மாதங்களுக்குப் பிறகு நேற்று 500 ஐ தாண்டி உள்ளது.  இதுவரை இங்கு 6.45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 10,948 பேர் உயிர் இழந்துள்ளனர்

தற்போது நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி இரண்டாம் கட்டமாக நடந்து வருகிறது.  ஏற்கனவே சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா முன்களப் பணியாளர்களுக்குப் போடப்பட்டுள்ளது.  தற்போது 60 வயதைத் தாண்டியவர்களுக்கு 45 வயதைத் தாண்டி இணை நோய்கள் உள்ளோருக்கும் மட்டும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “எங்கள் அரசு ஏற்கனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வோர் குறித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.  தற்போது கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அனைத்து வயதினரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்

இந்த தடுப்பூசியால் எவ்வித பக்க விளைவும் ஏற்படாது என்பதால் யாரும் தயங்க வேண்டாம்.  நான், எனது பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் போட்டுக் கொண்டோம்.  மற்றவர்கள் வயது வரம்பு  காரணமாக கொரோன தடுப்பூசி போட முடியவில்லை.   எனவே இந்த வயது வரம்பை 18 வயதுக்கு மேற்பட்டோர் என மாற்ற வேண்டும்.

மத்திய அரசு 18 வயதைத் தாண்டிய அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வசதியாக முகாம் அமைக்க அனுமதி அளித்து போதுமான அளவு மருந்தையும் விநியோகம் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்தால் எங்கள் திட்டப்படி 3 மாதங்களில் டில்லியில் உள்ள அனைவருக்கும் எங்களால் கொரோனா தடுப்பூசி போட முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.